|
நான் மறுபடியும் பிறந்து 15-வருடங்கள் ஆகிவிட்டன. இந்த வருடங்களில் ஏராளமான நல்ல செய்திகளைக் கேட்டு, அதன்படி வாழ நான் முயற்சித்தேன். “கிறிஸ்தவ வாழ்க்கை மிக எளிது” என்றே நான் ஆரம்பத்தில் எண்ணியிருந்தேன். ஆனால், சில வருடங்களுக்குப் பிறகு, எனது எண்ணம் தவறு என கண்டுகொண்டேன்! பின்பு, “கிறிஸ்தவ வாழ்க்கை கடினம்” என எண்ண ஆரம்பித்தேன். மீண்டுமாக, இவ்வாறு எண்ணியதும் தவறு என்பதையும் நான் கண்டுபிடித்தேன். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புதான் ‘சத்தியம் என்ன?’ என்பதை நான் கண்டுபிடித்தேன்! பல வருடங்களாய் நான் அடைந்த தொடர்ச்சியான வீழ்ச்சிகளும், மனச்சோர்வுகளும், தேவனுக்காக வாழவேண்டும் என நான் பிரயாசப்பட்ட வீணான முயற்சிகளும், எனக்கு கற்றுத்தந்த மெய்யான சத்தியம் யாதெனில் “புதிய உடன்படிக்கை போதிக்கும் ஜீவியத்தரமாகிய.... இடுக்கமான வழியில் முன்வைக்கப்பட்ட ஜீவனை அடைந்திடும் வாழ்க்கை.... என்னால் முற்றிலுமாய் கூடாது!” என்பதை கண்டுபிடித்தேன்.
மேலும், இவ்வித வாழ்க்கை வாழும்படி கொண்ட சாத்திய கூறான நம்பிக்கை அனைத்தையும் நான் இழந்து விட்டேன். அதேவேளையில், நான் தேவனுடைய பிள்ளை என்ற நிச்சயம் எனக்குள் இருந்தது! நான் இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டவன் என்றும், அவருடைய கிருபையால் பரலோகம் செல்வதற்கு நான் ஆயத்தமாயிருப்பதையும் நிச்சயமாய் அறிந்திருந்தேன்!!
ஆனால், அதே வேளையில், இந்த பூமியில் நான் வாழும்படி தேவன் எனக்கென்று வைத்திருக்கும் ஜீவிய தரத்தின்படி வாழ எண்ணால் முடியவில்லையே...... என்பதையும் அறிந்திருந்தேன்!!
நம்பிக்கை இழந்த முடிவுக்குச் சென்ற எனக்கு, புதியதோர் துவக்கம் ஆரம்பித்தது! ஆம், ஆவிக்குரிய கனியை நம்மிடமிருந்து தேவன் ஆர்வத்துடன் எதிர்பார்த்திடும் அதேவேளையில்.... புதிய ஏற்பாடு முழுவதிலும் இரண்டு இடங்களில் மாத்திரமே “நாம் எவ்வாறு கனி கொடுத்திட முடியும்” என்பதற்குரிய விளக்கத்தை இயேசு கூறியிருக்கிறார். 1) யோவான் 12:24- கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாவதின் மூலமாய்! 2) கொடியானது திராட்சை செடியில் நிலைத்திருப்பது போல, அவருக்குள் நிலைத்திருப்பதின் மூலமாய்! உண்மைதான், இதன் மூலமாக மாத்திரமே, பரிசுத்தாவியின் துணையோடு ஆண்டவர் நம்மில் கனியை உருவாக்கிட முடியும் என்பதைக் காண தேவன் என் கண்களைத் திறந்தார். மேலும், தேவன் நம்மில் எதிர்பார்த்திடும் இந்த ஒப்பற்ற வாழ்க்கையை அவருடைய குமாரன் இயேசுவின் துணை கொண்டு மாத்திரமே வாழ்ந்திட முடியும் என்பதையும் நான் அறிந்து கொண்டேன்!
|