|
இஸ்ரவேலர்கள் எகிப்தில் அடிமையாய் இருந்தபோது, தன்னுடைய ஸ்தானத்தில் நிற்கத் தரமுடைய ஒரு மனிதன் கிடைக்கும் வரை அவர்களை அவர்களுடைய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க தேவனால் முடியவில்லை. அந்த ஒரு மனிதன் உருவாகும்வரை தேவன் பொறுமையுடன் காத்திருக்க ஆயத்தமாய் இருந்தார்!
இஸ்ரவேலர்கள் எகிப்தில் அடிமையாயிருக்கும் காலத்தை 400 வருடங்கள் மாத்திரமே தேவன் தீர்மானித்திருந்தார் (ஆதியாகமம் 15:13). ஆனால் முடிவில் அவர்களோ 430 ஆண்டுகள் எகிப்தில் அடிமைகளாய் இருந்தனர் (யாத்திராகமம் 12:40). இவ்வாறு ஏன் 30 ஆண்டுகள் தேவனுடைய சித்தத்தைக் காட்டிலும் காலதாமதம் உண்டானது? நிச்சயமாய் “தேவன் காலத்தை தவறாய் கணித்துவிட்டார்” என்பது காரணமேயில்லை. தேவன் பிழையற்றவர்..... அவர் ஒருபோதும் தவறு செய்வதேயில்லை! காரியம் என்னவென்றால், இஸ்ரவேலர்களுக்கு 400 வருடங்களுக்குப்பின் தலைவனாய் வரவேண்டியவன் இன்னமும் ஆயத்தமாகவில்லை. வனாந்திரத்திற்குள் சென்ற 10 வருடத்தில் மோசே ஆயத்தமாகி விடுவான் என தேவன் எண்ணியிருந்திருக்க கூடும். ஆனால் தேவனுடைய கரத்தின் கீழ் தன்னுடைய ஆவிக்குரிய தேர்ச்சியை அடைவதற்கு, மோசேயிற்கு 40 வருடங்கள் ஆகிவிட்டது. இதனிமித்தமாய் இஸ்ரவேலர்கள் மேலும் 30 ஆண்டுகள் எகிப்தின் அடிமைத்தனத்தில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது!
வனாந்திரத்தில், ஒரு சமயம் மோசே இஸ்ரவேலர்களை விட்டு 40 நாட்கள் மாத்திரமே வெளியிடத்திற்கு (சீனாய் மலைக்கு) சென்று விட்டபடியால், சுமார் 20- லட்சம் ஜனங்கள் வழிவிலகி சோரம் போய்விட்டார்கள் (யாத்திராகமம் 32). ஒரு தேவமனிதன் அச்சமயம் அவர்களோடு வெறும் 40- நாட்கள் இல்லாதபடியால் முழுதேசமும் மெய் தேவனை புறக்கணித்து சோரம் போய் விக்கிரகங்களை வணங்கிடும் பரிதாப நிலைக்கு சென்றுவிட்டது!
இந்த இஸ்ரவேலர்கள் ஆச்சரியமான அற்புதங்களைத் தங்கள் சொந்த கண்களால் கண்டவர்கள். இருப்பினும் அவ்வற்புதங்களை ஞாபகப்படுத்தும் நினைவுகள், இஸ்ரவேலர்கள் விக்கிரகங்களை வணங்காதபடி காத்துக்கொள்ள முடியவில்லை. ஆம், அவர்களை கண்டிப்பான ஒரு தேவ மனிதனின் தலைமையே காத்திட முடிந்து!
மோசே சீனாய்மலைக்கு சென்றபோது, ஆரோன் ஜனங்களின் தற்காலிகத் தலைவனாய் இருந்தான். ஆரோன் என்னதான் நல்லவனாயும், தெய்வபயம் கொண்டவனாயும் இருந்தபோதும் அவன் ஜனங்களை தேவனுடைய அர்ப்பணத்திற்கு நடத்தமுடியவில்லை! நாம் வெளிப்படையாய் காண்கிறபடி, ஆரோன் ஜனத்திரளைப் பிரியப்படுத்த விரும்புகிறவனாய் இருந்தபடியால், அவனை இஸ்ரவேலர்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டார்கள்!!
இன்றும் இந்த ஆரோனைப் போலவே தங்களைக் கர்த்தருடைய ஊழியர்கள் என எண்ணிக் கொண்டிருக்கும் அனேக கிறிஸ்தவத் தலைவர்கள் நம் தேசத்தில் இருக்கிறார்கள். அவர்கள் தேவனுக்கு பயந்து ஜீவிப்பவர்கள், நல்லவர்கள்..... நேர்மையானவர்களும்கூட! இருப்பினும், தேவன் தம்முடைய சபையை தூய்மையாய் பாதுகாக்கும் பணிக்கு இவர்களைப் பயன்படுத்த முடியவில்லை! ஏனென்றால் இவர்கள் ஜனங்களுடைய விருப்பத்திற்கு மிக எளிதில் ஒத்தவேஷம் தரிப்பவர்கள்!! ஆம், சாத்தானுக்கு எதிராக யுத்தம் செய்யும் சபையை நடத்திச் செல்லுவதற்கு, இன்றும் மோசே போன்றவர்களையே தேவன் தேடிக் கொண்டிருக்கிறார்!!
|